தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Sunday, December 25, 2016

தங்கல் - இது ஒரு திரை விமர்சனம் அல்ல, சுய விமர்சனம்

நான் எழுதுவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. அதற்கான காரணங்கள் பல. சிலவற்றை வெளியே பொதுவில் கூற முடியாத அளவிற்கு ரகசியமானது. ஆனால் நேற்று பார்த்த தங்கல் திரைப்படம் என்னை மீண்டும் எழுத வைத்தது. இதில் குறிப்பிடதக்கது என்னவெனில் இதுவரை நான் ஒரு திரைப்பட விமர்சனம் எழுதியதேயில்லை.
இதை எழுதும் முன்னரே சொல்லிவிடுகிறேன். பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் மேல் திணிப்பது சரியா என்ற விவாதத்திற்கே நான் செல்லவில்லை. ஏனெனில் அது இங்கே முழுவதுமாக தேவையற்றது என்று ஒதுக்கி வைக்கிறேன். அதற்கான காரணத்தை இறுதியில் பார்க்கலாம்.
தங்கல், அமீர் கானின் திரைபடம். அதில் அவர் எவ்வாறெல்லாம் உடலை மெருகேற்றி நடித்திருக்கிறார். ஒரு மல்யுத்த வீரனாக கட்டிளம் காளையாகவும், ஒரு பதின் வயது பெண்ணின் தந்தையாகவும் அவர் எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டார் என்றோ, அந்த திரைப்படத்தின் இசை, நடிப்பு, இயக்கம் அல்லது இந்த சீனை இப்படி எடுத்திருக்கலாம் என்ற எதையுமே நான் சொல்லப் போவதில்லை. நான் இங்கே கூற நினைப்பது எல்லாம் தங்கல் திரைப்படத்தின்  கதை எப்படி இந்திய பெண்களின் கழலை சித்தரிக்கிறது என்பது மட்டுமே.
அமீர் கான் ஒரு தேசிய அளவிலான மல்யுத்த வீரர். பல கனவுகளோடு சந்திக்க நினைத்தவருக்கு குடும்ப சூழ்நிலை மற்றும் பொதுவான இந்திய மனோபாவமான இந்த மல்யுத்தத்தால் என்ன சாதித்து விடப் போகிறாய் என்ற அவரது பெற்றோர்களின் எண்ணம் காரணமாக மல்யுத்தத்தை விட்டு ஒரு சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை. இந்நிலையில் அவருக்கு பிறக்கும் குழந்தையை எப்படியேனும் ஒரு மல்யுத்த வீரனாக்க ஆசைப்படுகிறார் அமீர் கான். ஆனால் அவருக்கு பிறந்ததோ பெண் குழந்தை. அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு. இனி ஆண் குழந்தைக்கான முயற்சியே எடுக்க முடியாத நிலையில் தான் ஏன் அவரது பெண்களை மல்யுத்த வீராங்கனைகளாக்க கூடாது என்ற எண்ணம் தோன்ற அவர்களுக்கு அமீர்கானே பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் சாதித்தார்களா? அமீர் கானின் எண்ணம் நிறைவேறியதா என்பது தான் கதை.
ஒரு ஆண் மிக எளிமையாக சாதாரணமாக செய்யகூடிய காரியங்களை ஒரு பெண்ணால் ஏன் நம் இந்திய சமூகத்தில் செய்ய முடிவதில்லை என்பதற்கான கேள்வியை இப்படம் மிகவும் ஆணித்தனமாக காட்டுகிறது. அப்படியே ஏதாவது செய்ய நினைத்தாலும் அதை நம் சமூக அமைப்பு எவ்வாறு எடுத்து கொள்ளும்?  எவ்விதம் பேசுவார்கள் என்பதை மிகத் தெளிவாக இப்படம் உணர்ந்துகிறது. மேலும் ஒரு பெண்ணை அந்த குடும்பத்தில் உள்ளவர்களே எவ்வாறு பார்க்கிறார்கள் மற்றும் அவர்கள் ஆண்களைப் போல் மல்யுத்தம் செய்வதில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அழகாக காட்டப்படுகிறது. அதை விட முக்கியமாக ஆணோ பெண்ணோ, முதலில் மல்யுத்தம் என்பது எவ்வளவு சிரமமானது மற்றும் எந்த ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டுமானாலும் அதற்கு எவ்வளவு கடுமையான பயிற்சியும் விடாமுயற்சியும் தேவை என்பதை இப்படம் உணர்த்த தவறவில்லை.
பயிற்சியின் முதல் நாள் காலை ஐந்து மணிக்கு அந்த பெண்களுக்கு பானிப் பூரி வாங்கி கொடுத்து விட்டு இன்றோடு உங்களுக்கு பானிப் பூரியே கிடையாது. எந்த மல்யுத்த வீரனும் பானிப் பூரியே சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லும்  காட்சியிலேயே புரிந்து விடுகிறது, இவர்கள் இதன் பின் எவ்வளவு பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும்  என்று.
பெண்கள் மல்யுத்த பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்றதும் அதற்கான நடைமுறை சிக்கலிருந்து தொழிற்முறை பயிற்சி அளிக்க ஒதுக்கப்படும் நிதி அதற்கான பதவியிலிருப்பவர்களின் அலட்சியம் என அனைத்தும் நாம் நினைத்து கொண்டிருக்கும் வளரும் இந்தியாவின் மற்றொரு முகம்.
பயிற்சியின் ஆரம்ப நாட்களில் அந்த பெண்கள் ஆண்களிடம் மோதி தான் தங்களின் இலக்கை அடைய முடியும் என்னும் நிலையில் ஆண்கள் அவர்கள் மேல் செலுத்தும் அலட்சிய பார்வை, ஆண்களை பெண்கள் வெற்றி கொண்ட பின் அந்த ஆண்களை இந்த சமூகம் கேவலமாக பேசுவது என்பது நம்முடைய பழைய மனப்பான்மையை தோலுரித்து காட்டுகிறது. அது நம்முடைய பெண்களுக்கு எவ்வளவு பெரிய முட்டுக்கட்டையை எழுப்புகிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா?
ஒரு பெண் தன்னை மல்யுத்தத்தில் நிரூபிக்க கட்டாயம் ஆண்களுடன் போட்டியிட்டு தீர வேண்டும். அதில் வெற்றி பெற்று கிடைக்கும் அங்கிகாரம் தான் அவளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இல்லையேல் அவள் மீண்டும் அடுப்பூத சென்று விட வேண்டும். ஆனால் அந்த ஆணுடன் மோதுவதும் அவ்வளவு எளிதானது அல்ல. எந்த ஆணும் ஒரு பெண்ணுடன் மோத காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அது போல் எந்த பெண்ணிடம் தோற்றுப் போகும் ஆணையும் இந்த சமூகம் இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. இதற்கான மாற்றத்தை எடுத்து வருவதே இத்திரைப்படம்.
இப்போது ஆரம்பத்தில் சொன்னதற்கு வருகிறேன். அமீர் கான் தனது விருப்பத்தை தன் குழந்தைகள் மீது திணித்தது தவறு என்று கூறுபவர்களுக்கு நான் கூற விரும்புவது, அமீர் கான் அதற்காக தனியாக வேறு ஒரு கதையில் நடிப்பார். அதை பார்த்து கொள்ளவும். அப்போது அந்த படத்தில் வேறு குறைகளை கண்டுபிடிக்கவும்.
திரைப்படம் என்பது மக்களை மகிழ்விப்பதற்காக என்று மட்டுமே என்று எண்ணுவோர் தயவு செய்து இப்படத்தை பார்க்க வேண்டாம். ஏனெனில் ஒரு வேளை நீங்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. எனவே உஷார். அமீர் கான் தயவு செய்து இந்தியாவை விட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையும் மறுக்க இயலாது. ஏனெனில் அமீர் சார் தேர்ந்தெடுக்கும் கதை அவ்வளவு தரமானது. அதற்கான அவரது உழைப்பு அவ்வளவு நேர்த்தியானது. இது பழமைவாத எண்ணம் கொண்ட நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து.
என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நான் ஒரு சிறந்த இந்திய குடிமகனோ, சிறந்த மகனோ, சிறந்த மாணவனோ இல்லை. ஆனால் நாளை நான் தந்தையானால் அமிர் கானைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது தவறு என்று சொல்பவர்களுக்கு நான் கூறுவது என்னவெனில் இப்போது மட்டும் நான் சிறந்தவனாக இருக்கிறேன்? இப்போது நான் இருப்பதை விட அது சிறந்த நிலைதான்.


Tuesday, July 5, 2016

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் – என் அனுபவம் மற்றும் புத்தக விமர்சனம்



இதை ஒரு புத்தக விமர்சனம் என்று சொல்வதை விட என் வாழ்வில் கிடைத்த மகத்தான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். நான் கூறப்போகும் இச்சம்பவம் கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எனக்கு அப்போது கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. மேலும் அறிவியலைத் தவிர அப்போது வேறு எதையும் நான் நம்புகிறவனும் அல்ல. என்னுடைய நண்பர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும் என்ற புத்தகத்தை படிக்க நினைத்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் வைத்திருந்த  புத்தகத்தை எனக்கு கொடுக்காமல் கடையிலிருந்து புதிதாக வாங்க சொல்லிவிட்டார். அவர் என்னுடைய குருநாதரும் கூட என்பதால் அப்புத்தகத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன்.

     தி.நகரில் நியூ புக் லாண்ட்ஸ் சென்று ஒவ்வொரு புத்தகமாக தேடிக் கொண்டே அந்த பெரிய அறையின் உள்விளிம்பிற்கு சென்று தேடிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த மூலையில் கடைசி புத்தகமாக ஆரஞ்சு நிறத்தில் தலையணைப் போல தடிமனாக ஒரு புத்தகத்தை கண்டேன். அதன் அட்டையில் ஏதோ ஒரு சாமியாரின் படம் அட்டையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அதன் தலைப்பைக் கூட சரியாக பார்க்கவில்லை ஆனால் அதற்குள்ளாக மனதிற்குள், இந்த மாதிரி சாமியார்கள் புத்தகம் எழுதி தன்பக்கம் பெரும் கூட்டத்தை வரவழைத்து பின்னர் ஏமாற்றுகின்றனரே. இது மாதிரியான போலி சாமியார்கள் எதற்காக புத்தகம் எழுதுகின்றனர் என்று தெரியாதா என்று இன்னும் என்னென்னவோ என் மனதிற்குள் எண்ணிக் கொண்டே அந்த இடத்தை கடந்து வந்து விட்டேன்.  

அதன் பின் பல வருடங்கள் கடந்தன.இடைப்பட்ட வருடங்களில் நானும் என் குருநாதரும் அறிவியல், தத்துவம், சமயம், உளவியல், புலன் கடந்த உளவியல், இலக்கியம் என பலவற்றை பற்றி விவாதித்திருந்தோம். வழக்கமாக மேற்கத்திய தத்துவத்தைப் பற்றி பேசும் நாங்கள் அன்று கிழகத்திய தத்துவத்தைப் பற்றி விவாதிக்க நேர்ந்தது. அப்போது அவர் ரமண மகரிஷி மற்றும் மகா பெரியவர் பற்றி ஏதோ கூற போய் இறுதியில் அது கடவுள் நம்பிக்கையில் வந்து நின்றது.

அறிவியலை நம்பும் எனக்கு கடவுளின் மீது நம்பிக்கையில்லை என்றதும் அவர் சிறிது வருத்தமடைந்ததை அவருடைய முகமே காட்டிக் கொடுத்தது. எனினும் அதை முழுவதுமாக வெளிக்காட்டாமல், அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது என்றார். அவர் என்னுடைய குருநாதராக இருந்தாலும் அவரின் அதீத கடவுள் நம்பிக்கை அவரை அவ்வாறு எண்ண வைக்கிறது என்று நான் நினைத்தேன்.

நீ தவறாக நினைக்கவில்லையென்றால் நான் உனக்கு ஒரு கதை கூறுகிறேன், அதுவும் மகா பெரியவர் கூறிய கதை என்றார்.

ஒரு குறிப்பிட்ட ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவன், அந்த ஆறு முழுவதிலுமே அவன் வலையில் சிக்கும் அளவு வளர்ச்சி அடைந்த மீன்கள் மட்டும் தான் இருக்கும் என்று கூறுவது சரியா? என்று கேட்டார்.

நான் உடனடியாக அதெப்படி இருக்க முடியும்? ஆற்றில் வெவ்வேறு அளவுள்ள மீன்கள் இருக்கும். நாம் போடும் வலை என்ன மாதிரியானது, அந்த வலை பின்னப்பட்டிருக்கும் இடைவெளி முதலியவற்றைப் பொறுத்தே வலையில் எந்த அளவுள்ள மீன்கள் பிடிபடும் என்பது அமையும். அந்த வலையிலுள்ள இடைவெளியை விட சிறிய அளவிலான மின்கள் அவ்வலையில் மாட்டது என்றேன். உடனே அவர் சிரித்து கொண்டே அறிவியல் என்பதும் இது போல் ஒரு வலைதான். அறிவியல் வலை மூலம் நீ இந்த பிரபஞ்சத்தை பார்க்கும் போது அதன் ஓட்டையின் வழியே மற்றவற்றை உன்னால் பிடிக்க முடியாமல் போய் விடலாம். அதற்காக அறிவியலைத் தவிர்ந்து வேறெதுவுமில்லை என்று எவ்வாறு கூற முடியும் என்றார். அதுவரை அறிவியல் மட்டும் தான் உண்மை என்று எண்ணிய எனக்கு அதன் பின் தான் உண்மை விளங்க ஆரம்பித்தது. அதன் பின் என்னுடைய நம்பிக்கைகளும் மெதுவாக மாற ஆரம்பித்தது என்றாலும் கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள நான் சில புத்தகங்களைப் படிப்பது அவசியமாகியது. அப்போது எனக்காக என்னுடைய குருநாதர் பரிந்துரைத்த புத்தகம் தான் ஒரு யோகியின் சுயசரிதை - பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம். நானும் வழக்கம் போல் அந்த புத்தகத்தை தேடி அலைந்தேன். கிட்டதட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தி.நகரில் நியூ புக் லாண்ட்ஸ் சென்று அந்த புத்தகத்தை தேடினேன். யாரையும் உதவிக்கு அழைக்காமல் நானே புத்தகத்தை தேடி எடுப்பது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம் என்பதால் அவ்வாறே செய்ய அந்த கடையின் கடைசி விளிம்பின் ஓரத்திற்கு சென்றிருந்தேன். இந்த விளம்பிற்கு ஏற்கனவே வந்தது போல் உள்ளதே என்று எண்ணி என்னுடைய பார்வையை உயர்த்து கையில் மீண்டும் அதே ஆரஞ்சு நிற அட்டையில் பெரும்பாலான பகுதியை ஒரு சாமியார் ஆக்கிரமித்தபடி மிகவும் தடிமனான அந்த புத்தகம் என் கண்ணில்பட்டது. இதை முன்பு எப்போதோ பார்த்திருக்கிறேனே என்று எண்ணியப் போது அந்த பழைய சம்பவம் என் நினைவிற்கு வந்தது. இத்தனை வருடங்களாக இந்த புத்தகத்தின் இடத்தை மாற்றவில்லையா என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் ஏழு வருடங்களுக்கு முன்பிருந்த மனநிலை இப்போது எனக்கு இல்லையே. ஏனெனில் இப்போது நான் வாங்க வந்திருக்கும் புத்தகமே ஒரு யோகியின் சுயசரிதை ஆயிற்றே! எனவே இம்முறை அந்த சாமியாரை திட்டாமல் அந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். அது நான் எந்த புத்தகத்தை தேடி வந்தேனோ சாட்சாத் அதே புத்தகம் தான்.

உண்மையை சொல்லப் போனால் அப்போது நான் வெட்கப்பட்டு கூனி குறுகி போனதற்கு அளவேயில்லை. ஏழு வருடம் முன்பு எந்த புத்தகத்தையும் எந்த சாமியாரையும் நான் கண்டபடி திட்டினேனோ அதே புத்தகத்தை வாங்க இன்று அதே கடைக்கு வந்திருப்பதை எண்ணி ஆச்சர்யமும் அடைந்தேன். ஏனெனில் அந்த புத்தகத்தை தேடி நான் வேறு சில கடைகளையும் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கே எங்காவது இப்புத்தகம் கிடைத்திருந்தால் நிச்சயமாக எனக்கு ஏழு வருடங்களுக்கு முன் நான் திட்டிய அதே புத்தகம் தான் இது என்று தெரிந்திருக்காது. ஏனெனில் நான் அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டிருந்தேன். அவ்வளவு கூட வேண்டாம். ஏழு வருடங்களுக்கு முன்நியூ புக் லாண்ட்ஸில் எங்கு அந்த புத்தகத்தைப் பார்த்தேனோ அதே இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இந்த புத்தகத்தை ஏழு வருடங்களில் அந்த கடை ஊழியர்கள் மாற்றி வைத்திருந்தாலும் நான் அதை பார்க்கும் வாய்ப்போ, அந்த பழைய சம்பவத்தை நினைவுவோ எனக்கு வராமல் போயிருக்கு. ஆனால் அவ்வாறு நடக்காமல் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டது போல் சரியாக அமைந்ததற்கு அறிவியல் கொடுக்கும் விளக்கம் வெறும் தற்செயல். ஆனால் நடந்த சம்பவமோ, அந்த புத்தத்தைப் படித்த பின் என் வாழ்க்கை மாறிய விதத்தையும் பார்க்கும் போதும் நான் ஒரு வானியல் கழக உறுப்பினராக, முதுகலை கணிதம் பட்டம் பெற்றவனாக, பல அறிவியல் புத்தகங்களை எழுதியவனாக இருந்தும் என்னால் அதை வெறும் தற்செயல் என்று எண்ண முடியவில்லை.

சரி இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்த புத்தகத்தைப் பற்றி சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்குமா?

முன்னரே சொன்னது போல அப்புத்தகம் பரமஹம்ஸ யோகா நந்தர் தன்னைப் பற்றி எழுதிய சுயசரிதை. அற்புதங்களும் அதிசயங்களும் எதிர்பாராமல் நடப்பதுதான்.முகுந்தனின் வாழ்விலும் அப்படி நடந்த பல அற்புதங்களையும் அதிசங்களையும் அப்புத்தகத்தின் முதல் பாதி விவரிக்கிறது. சாதாரண முகுந்தன் எப்படி நாடு போற்றும் பரமஹம்ஸ யோகாநந்தர் ஆனார் என்பதை மிகவும் எளிமையான மொழியிலேயே அவர் கூறுகிறார். சிறுவயது முதலே தான் ஒரு சாமியாராக வேண்டும் என்று அதற்காக மிகச்சிறு வயதிலேயே வீட்டிற்குத் தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து இமயமலை செல்வதும், முகுந்தனின் தந்தை ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்ததால் முகுந்தனை தேடி இமயமலை செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தியும், இவர்கள் மாறுவேடத்திலிருப்பதால் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், தவத்தின் வலிமைப் பற்றி முகுந்தனின் நண்பர்களிடம் அவன் கூறிய ஒரு சிறு விஷயம் அவர்கள் காவலர்களிடம் மாட்டிக் கொள்ள வழிவகுத்ததை நினைக்கும் போது சிரிக்கத் தோன்றுகிறது. உண்மையில் யோகானந்தரும் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் இறுதியில் அவரும் சிரிக்கிறார். அப்படி என்ன சம்பவம் நடந்தது?

ரயிலில் தவத்தைப் பற்றி முகுந்தன் தன் நண்பர்களிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது, இமயமலையில் தவம் செய்யும்போது அங்கே புலிகள் நம்மை சுற்றித் திரிந்தாலும் நம்மை அது ஒன்றும் செய்யாது. ஏனெனில் அதுதான் தவத்தின் வலிமை என்று கூறப் போக ஒரு நண்பன் தானாக காவலர்களிடம் மாட்டிக் கொண்டு மற்றவர்களையும் மாட்டி விட்டு விட முகுந்தனுக்கு ஒரே கோபம். காவல் நிலையத்தில் அவனிடம் முகுந்தன் கோபமாக காரணம் கேட்க அவனோ புலிகள் உள்ள காட்டில் தவம் புரிந்து எந்த புலியின் வயிற்றுக்குள்ளும் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று சென்னதும் அந்த இடத்திலேயே முகுந்தனுக்கு சரிப்பு வந்து விடுகிறது.

பள்ளியில் படிக்கும் முகுந்தன் அடிக்கடி இப்படி சாமியாகிறேன் என்று கூறி வீட்டை விட்டு கிளம்பி விடுவதால், முகுந்தனின் பெரிய அண்ணன் (கிட்டதட்ட இருவருக்கும் பத்து வயது வித்தியாசம்) இப்படி அடிக்கடி கடவுள், தவம் என்றெல்லாம் சொல்கிறாயே. தந்தை சம்பாதியத்தில் உணவும், உடையும், இருக்க இடமும் சரியாக கிடைத்து விடுவதால் தானே நீ எப்போதும் இப்படி கடவுள் கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ உணவுக்காக தானே இவ்வாறு அலைந்து கொண்டிருந்திருப்பாய்? என்று வினவ அதற்கு முகுந்தனோ, கடவுளுக்கு நிகராக வேறெதுவுமில்லை. ஒருவேளை உணவிற்கே சிரமப்பட்டு கொண்டிருந்தாலும் அப்போதும் தான் கடவுளை நோக்கி தன் பயணத்தையே மேற்கொள்வதாக கூறிய அவன் இந்த பெரிய பிரபஞ்சத்தில் கடவுள் தனக்கான உணவை கட்டாயம் வழங்குவார் என்றும் கூற இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது.

உடனே முகுந்தனின் அண்ணன், அப்படியென்றால் கல்கத்தாவிலிருந்து பிருந்தாவனத்திற்கு கையில் எந்த பணமுமில்லாமல் சென்று மீண்டும் குறிபிட்ட நேரத்திற்குள் திரும்ப வரவேண்டும். கையில் கல்கத்தாவிலிருந்து பிருந்தாவனத்திற்கான ரயில் பயணச்சீட்டு மட்டுமே வைத்து கொண்டு அங்கு செல்ல வேண்டும். மீண்டும் திரும்ப வரும் வரை உணவு, திரும்புவதற்கான பயணச்சிட்டு என அனைத்து கடவுள் தான் வழங்க வேண்டும். ஏனெனில் எந்த நிலையில் தங்களுடைய நிலையைப் பற்றியும், அண்ணனுடன் செய்து கொண்ட சவால் பற்றியோ யாரிடமும் கூர கூடாது. மேலும் எந்த நிலையிலும் உணவிற்காக பிச்சை எடுக்கவும் கூடாது என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று. இவை ஆனைத்தும் சரியாகத் தான் நடக்கிறதா என்பதை கண்காணிக்க முகுந்தனின் நண்பனும் உடன் அனுப்பப்படுகிறான். அதுவும் அவ்விருவரின் உடைகளையும் களைந்து அவர்கள் தனக்குத் தெரியாமல் ஏதாவது பணத்தை மறைத்து கொண்டு செல்கிறார்களா என்று கண்காணிப்பதற்காக. அப்படி எதுவுமே இல்லாமல் வெறும் கடவுள் நம்பிக்கையை மட்டுமே வைத்து செல்லும் சிறுவர்கள் திரும்ப பத்திரமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தார்களா? அந்த சவால் ஜெயித்தார்களா என்பதை நீங்களே அந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அவரின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களும், அதில் கடவுள் நிகழ்த்திய அதிசயங்களும் அந்த புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. தன் சகோதரி கேட்ட பட்டம் வானிலிருந்து அருந்து கைக்கு பக்கத்தில் இருப்பது, படிக்காமலேயே கல்கத்தா பல்கலை கழகத்தில் பட்டம் பெறுவது, தெருவில் சாதாரணமாக போகும் ஒருவன் திடீரென யோகானந்தரின் அறையில் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் விட்டு விட்டு கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் காளிபிளவர்களிலிருந்து ஒரேயொரு காளிபிளவரை மட்டும் திருடிச் செல்வது, தனது குரு யுக்தேஸ்வர் கிரியின் துணையுடன் கடவுளை காண்பதும், பாபாஜியுடன் உரையாடுவதும் என பல அதிசயங்கள் மிகவும் இயல்பாக அவரது வாழ்வில் நடப்பதை படிக்கும் போதே நமக்கு அது ஆனந்தத்தை அளிக்கிறது.

மேலும் ஸ்ரீ யுதேஸ்வர் கிரி இலை மறை காயாக பரமஹம்ஸருக்கு சொல்லித் தரும் பல விஷயங்கள் நம்முடைய வாழ்விற்கும் உதவக்கூடியது என்பதால் அது ஏதோ புண்ணிய ஆத்மாகளுக்கோ அல்லது சாமியார்களுக்கோ மட்டும் சொல்லப்படும் அறிவுரையாக அமையாமல் படிக்கும் அனைவரின் வாழ்விலும் உபயோகிக்கும் வண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஏதோ உபதேசம் செய்து கொண்டிருக்க அதை அவரது சீடர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருப்பர். அப்போது பரமஹம்ஸரை ஒரு கொசு தொடர்ந்து அவரது கவனத்தை கலைக்க சற்றும் தாமதிக்காமல் அவருடைய கை அன்னிச்சையாக அந்த கொசுவை கொல்ல தனது கையை உயர்த்தி விடுவார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கொல்லாமையை எண்ணி ஒங்கிய கையை அப்படியே நிறுத்திவிட அவருடைய குருவோ உடனே, ஏன் நிறுத்திவிட்டாய்? உனது மனதால் எப்போதோ அந்த கொசுவை கொன்று விட்டாய். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் வெறும் அதை அடிக்க வேண்டியது மட்டும் தான் எனும் போது அதன் உள்ளார்ந்த அர்த்தம் அதைப் படிக்கும் நமக்கும் புரிகிறது.


கடவுளைப் பற்றிய உபதேசங்களோ, விளக்கங்களோ தெரிந்து கொள்ள நினைத்தாலோ, கடவுள் நம்பிக்கையின் ஆரம்ப நிலையிலிருந்தாலோ அவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களே கட்டாயம் படிக்க வேண்டியது எனில் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு செல்லவா வேண்டும். 

Sunday, March 6, 2016

பிரபஞ்ச வானியல் கழகம் - வானியல் கழகத்தில் சினிமா நடிகை சொப்பண சுந்தரி


பிரபஞ்ச வானியல் கழகம்

     இந்த தொடர்கதை யார் மனதையும்  புண்படுத்த அல்ல. வெறும் சிரித்து மகிழ மட்டுமே. இந்த கதைகள் விசேஷமாக என்னுடைய வானியல் கழக நண்பர்களுக்காக எழுதப்படுவது. இந்த தொடர்கதையை எழுத காரணமாக இருந்த டாக்டர். ஆனந்த் அவர்களுக்கு நன்றி. என்னுடைய குருநாதர் திரு.ரமேஷ்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மேலும் என்னுடைய வானியல் நண்பர்கள் குறிப்பாக விஜயகுமார், முரளிதரன், சர்வேஷ், பாலாஜி என அனைவருக்கும் நன்றிகள்.

     இது ஒரு விஞ்ஞான கதை வரிசையில் எழுதப்பட்ட தொர்கதை. எனவே இதில் பிரபஞ்சத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் கதாப்பாத்திரங்கள் வரலாம். சில இடங்களில் அறிவியல் விதிகள் மீறப்படலாம். பெரும்பாலும் எங்கள் வானியல் கழக உறுப்பினர்களுக்கு மட்டுமே புரியுமாறும், அவர்கள் ரசிக்குமாறும் எழுதப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் வாழும் ஒவ்வொருவர் வானியல் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் போது அங்கு நடக்கும் வேடிக்கையான சாம்பவங்களே இத்தொடர்கதை. தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்நோக்கும் உங்கள் வினோத் குமார். இனி கதைக்குள் செல்வோம்.

1.   வானியல் கழகத்தில் சினிமா நடிகை சொப்பண சுந்தரி


     அந்த பிரபஞ்ச வானியல் கூட்டம் எப்போதும் போல இம்முறையும் ஆன்ட்ரோமீடா கேலக்ஸியில் நடக்கவிருந்தது. எப்போதும் போலவே பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அதன் உறுப்பினர்கள் அதில் பங்கேற்பதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாடும் அந்த ஆன்ட்ரோமீடா கோளரங்கத்தில் செய்யப்படவில்லை என்பதை அங்கு வரும் உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதோ என்ற பரபரப்பில் அவசர அவசரமாக கூட்டம் நடக்கும் அறைக்குச் சென்றார் அதன் ஒரு உறுப்பினரான முரளிதரன். இவர் பிடல்கியூஸ் எனும் நட்சத்திரத்திலிருந்து வருபவர். அந்த நட்சத்திரம் ஒரு சிகப்பு அரக்கன் வகையைச் சேர்ந்தது. அரக்கன் என்றவுடன் அதில் வாழ்பவர்கள் அனைவரும் முரடற்கள் என்று எண்ணிவிட வேண்டாம். ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் இளமை காலத்தில் நீல நிறமாகவும் வயதாக வயதாக சிகப்பு நிறத்திற்கும் மாறும். மேலும் வயதாக வயதாக அது பெரிதாக உப்பிக் கொண்டே செல்வதால் அதற்கு சிகப்பு அரக்கன் என்று பெயர். நான் சொன்னதிலிருந்தே தெரிந்திருக்கும், அந்த முரளிதரனும் வயதானவர் தான். ஆனால் இதை யாரும் சத்தம் போட்டு படித்துவிடதீர்கள். ஏனெனில் அவருக்கு வயதாகிவிட்டது என்று யாராவது அவர் காதுபட கூறினால் கோபம் வருவதுடன்  அவருக்கு அது பிடிப்பதுமில்லை.

     நல்ல சிகப்பான மேனியுடன் மற்ற இளைய நட்சத்திரங்களிலிருந்து வரும் இளைஞர்களைப் போல் இவரும் பல மேக்கப் மற்றும் ஆடைகளை உடுத்திக் கொண்டாலும் இவரை மற்றவர்கள்  பார்த்தவுடன் சொல்லும் முதல் வார்த்தையே ‘அங்கிள்’ தான். அதனால் தானோ என்னவோ அவருக்கு உடனடியாக முகம் வாடியுடுவதுடன், மேற்கொண்டு எதையும் பேசாமல் தவிர்த்து விடுவார்.

     அவசர அவசரமாக உள்ளே சென்றவருக்கு ஏமாற்றம். அங்கே அவருக்கு முன்பாக வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஒருவேளை இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டதா? என்ற எண்ணத்துடன் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்தார் முரளிதரன். அந்த நால்வரையும் அதற்குமுன்  பார்ததிருந்தாலும் அவர்களுடன் அதுவரை அவர் பேசியதில்லை. அந்த நால்வரும் அவர்களுக்குள் ஏதோ முக்கியமாக பேசிக் கொள்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர் ஒதுங்கிவிட்டார்.

     அந்த நால்வரில் ஒருவர் விஜயகுமார். ஒரியன் நெபுலாவிலிருந்து வருபவர். அது ஒரு நடுத்தர வயது நெபுலா. அது ஹன்ட்டர் கான்ஸ்ட்டலேஷனில் காணப்படும். பிடல்கியூஸ் எனும் திருவாதிரை நட்சத்திரமும் அதே கான்ஸ்ட்டவேஷனில் இருப்பதால் முரளிதரனும் விஜயகுமாரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் மூவரும் சர்வேஷ், பாலாஜி மற்றும் வினோத் குமார். இவர்கள் பிரபஞ்சத்தில் எந்தவித முக்கியத்துவமுமில்லாத சூரிய குடும்பம் எனும் பகுதியில் குறிப்பாக அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருக்கும் மூன்று சிறிய கற்கள். எனவே அவர்கள் மூவரும் வயதில் சிறியவர்கள் என்பதை நான் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.

அந்த நால்வரும் முரளிதரன் அங்கே ஒரு மூலையில் அமர்ந்திருப்பதை கூட கவனிக்காமல் பேசிக் கொண்டிருக்கையில் விஜயகுமார் முரளிதரனின் பக்கம் திரும்பினார்.

"என்ன சார் வேற யாரு வரல போலயிருக்கே” என்று விஜயகுமார் சொல்ல முரளிதரனும் அவருடைய மவுனத்தை கலைத்தார்.

"அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. ஏன் யாரும் வரல” என்று கேட்டுக் கொண்டே அந்த நால்வரின்  அருகில் சென்று அமர்ந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் சீரியசான முகத்துடன் முரளிதரன் தோன்றிய காரணத்தினால் அவரிடம் மற்ற மூன்று இளைஞர்களும் எதுவும் பேசாமலேயே இருந்தனர். அந்த மூவரும் தங்கள் மனதிற்குள்ளாகவே முரளிதரனைப் பற்றி அறிவியலில் தீவிரமான ஆவலிருக்கும் உறுப்பினர் என்ற எண்ணத்தை கொண்டனர்.

"என்ன சார், போன தடவ கூட்டத்திற்கும் யாரும் பெரிசா வரலை. இந்த தடவையும் வரலைனா எப்படி?”

"வானியல் மேல இவங்களுக்கு எல்லாம் அவ்வளவு தான் ஆர்வம் போலயிருக்கு. அதனால தான் யாரும் பெரிசா வரதில்லை.” என்று விஜயகுமாருக்கு பதிலளித்தார் முரளிதரன்.

"இதுக்கு நாம ஏதாவது பண்ண வேண்டாமா? ஒவ்வொருத்தரும்  இதுக்காக எவ்வளவு தூரத்துல இருந்து இங்க வர்றோம். ஒவ்வொரு தடவையும் இப்படியே நடந்தா எப்படி?” என்று வினோத் கூற முரளிரன் இந்த இளைஞர்கள் யார்? என்ற தோரணையில் அவர்களைப் பார்த்தார். பின்னர் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு அந்த அறையை விட்டு பேசிக் கொண்டே வெளியேறினார்கள்.

“இவங்களை வரவைக்க என்ன தான் பண்ணுறது?” என்று விஜயகுமார் கேட்க, சர்வேஷ் “ஏதாவது பெரிய சயின்டிஸ்ட்ட கூட்டிட்டு வந்து பேச சொல்லலாம்”.

வினோத் "அதெல்லாம் சரியா வராது. நம்ப ஆளுங்களுக்கு சயின்ஸ்னாலே அலர்ஜியா இருக்கே”.

விஜயகுமார் "நம்ப உறுப்பினர்கள் மட்டுமில்ல. பப்ளிக்குக்கும் அஸ்ட்ரானமி பத்தி அவர்னஸ் வர்ற மாதிரி ஏதாவது பண்ணனும்".

வினோத் "வேணும்னா ஒரு டிரிப் போட்டு கசிரோப்பியா, டெனபோலானு கூட்டிட்டு போலாம். ஒரு சோலார் டே டிரிப் தான்.”

பாலாஜி “ஆனா அதுக்கு யாரு செலவு பண்ணுவா”

வினோத் “யார் யார் வராங்களோ அவங்க தான் பண்ணனும்"

விஜயகுமார் "சுத்தம். அப்படினா யாரும் வரமாட்டாங்க."

முரளிதரன் சற்று யோசித்து விட்டு “என்கிட்ட அருமையான ஐடியா இருக்கு” என்றார்.

வினோத் "முதல்ல ஐடியா என்னனு சொல்லுங்க. அது அருமையா இல்லையானு நாங்க சொல்லுறோம்”

மற்றவர்கள் முரளிதரனை அங்கிள் என்று சொல்லாத வரை அவருக்கு சந்தோஷம் தான்.

முரளிதரன் “நான் வேணும்னா ஏதாவது கிரிக்கெட் ப்ளேயரை  கூட்டிட்டு வரேன்” என்றவர், "ஆமா உங்க நடசத்திரத்துல எல்லாம் கிரிக்கெட் விளையாடுறாங்களா? கிரிக்கெட்னா என்னனு தெரியுமா?”

பாலாஜி "என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க. கிரிக்கெட் ஒரு யூனிவெர்சல் கேம். நானே அதுல எத்தனை கோல் அடிச்சியிருக்கேன் தெரியுமா?” என்றவுடன் அனைவரும் சிரிக்க, முரளிதரன் மட்டும் கொஞ்சம் கடுப்பானார். அதற்கு பாலாஜி தன்னை அங்கிள் என்று அழைத்ததும் ஒரு காரணம்.

முரளிதரன் “எனக்கு சச்சின் ஹன்ரட்கரை நல்லா தெரியும். அவர் கூட நான் போட்டோ எல்லாம் எடுத்து இருக்கேன். அவரை வேணும்னா கூப்பிடலாம்".

சர்வேஷ் "ஆனா நாங்க சச்சின் டெண்டுல்கரை தானே கேள்விப்பட்டிருக்கோம். பூமியில அவர் விளையாடுறாரு."

முரளிதரன் “ஓ, அப்படியா? ஆனா நான் அவரையெல்லாம் கேள்விபட்டதில்லை. எனக்கு சச்சின் ஹன்ரட்கரை தான் தெரியும். அவர் சேப்பாக்கம்  ஸ்டேடியம்ல விளையாட வந்தபோ எடுத்த போட்போ".

வினோத் “சேப்பாக்கம் ஸ்டேடியம் பூமியில தானே இருக்கு. நீங்க பூமிக்கு போயிருக்கீங்களா?”

முரளிதரன் “ஏன் சேப்பாக்கம் ஸ்டேடியம் பூமியில மட்டும் தான் இருக்கனுமா? எங்க பிடல்கியூஸ் நட்சத்திரத்துல இருக்கக்கூடாதா?”

பாலாஜி “அதெப்படி இருக்க முடியும்?”

முரளிதரன்  “ஏன் முடியாது. எங்க பிடல்கியூஸ் நட்சத்திரத்துல மெரினா பிச்சுக்கு பக்கத்துல அந்த ஸ்டேடியம் இருக்கு”

சர்வேஷ் “இந்த யூனிவர்ஸ்ல ஒரே இடம் பல நட்சத்திரத்துத்துலயும் இருக்க வாய்ப்பு இருக்கு.”

வினோத் "அப்படினா இன்னொரு முரளிதரன் அங்கிள் இருக்கவும் வாய்ப்பு இருக்கா?”

சர்வேஷ் "ஏன் இல்லாம. கண்டிப்பா இருப்பாரு. அவரு பூமியில பள்ளிக்கரணையில கூட இருக்கலாம். ஏன் நம்ம விஜயகுமார் அங்கிள் மாதிரி இன்னொருத்தர் கே.கே.நகர்ல கூட இருக்கலாம். இன்னொரு வினோத் திருவல்லிகேணியில இப்போ நாம பேசிட்டு இருக்குறதையே தொடர்கதையா எழுதிட்டு இருக்கலாம்.”

முரளிதரன் "அப்போ என்னை மாதிரி இன்னொருத்தன் இருந்தா அவனுக்கும் ஒரே ஒரு பொண்டாட்டி தான் இங்குமா?”

வினோத் “அவருக்கு எத்தனை பொண்டாட்டி இருந்தா என்ன? அவங்களை நீங்க என்ன பண்ணமுடியும்?”

முரளிதரன் "வெறும் சந்தோஷமாவது பட்டுகலாமே.”

சர்வேஷ் "ஆர்வ கோளாறுல உங்களை மாதிரி வேற யாரையாவது பார்த்து அவங்களை தொட்டுட போறீங்க. அதுக்கு அப்புறம் நீங்க வேற யாரையும் தொட முடியாது.”

முரளிதரன் "ஏன் சர்வேஷ். அப்படி தொட்டா தீட்டா?”

பாலாஜி "தீட்டு இல்ல. அதோட நீங்க காலி. உங்களை மாதிரியே இருக்குற அந்த இன்னொருத்தர் உங்களோட ஆன்டி மாட்டர். அதனால ரெண்டு பேரும் சேர்ந்து வெடிச்சி பஸ்பமாகிடுவீங்க.”

முரளிதரன் "என்னது? ஆன்ட்டிய மேட்டர் பண்ணணுமா?”

வினோத் "ஐயோ, ஆன்ட்டி மேட்டர்னா அது இல்ல. சரி, அது எதுக்கு இப்போ. நம்ப வானியல் கழகத்துக்கு ஆள் சேர்க்குறதுக்கு ஐடியா குடுங்க.”

முரளிதரன் "என்னபா. ஆன்ட்டிய மேட்டர் பண்ணணும்னு சொல்லுறீங்க அப்புறம் வேணானு சொல்லுறீங்க. சரி என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு.”

வினோத் "ஆன்ட்டிய மேட்டர் பண்ணுறதுக்கா”

முரளிதரன் "அதுக்கு நிறைய ஐடியா இருக்கு. ஆனா நம்ப க்ளப்புக்கு ஆள் சேர்க்க அது மாதிரியே ஒரு நல்ல ஐடியா இருக்கு”

விஜயகுமார் "என்ன ஐடியா?”

முரளிதரன் "ஏதாவது கவர்ச்சி நடிகையை நம்ப மீட்டிங்குக்கு கூப்பிடுவோம். அப்புறம் பாருங்க. கும்பல் அல்லும்.”

சர்வேஷ் "எனக்கு இந்த ஐடியாவே பிடிக்கலை. வானியலுக்கும் நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம்.”

பாலாஜி “அதுவும் கவர்ச்சி நடிகை"

முரளிதரன் "எனக்கு தெரிஞ்ச கவர்ச்சி நடிகை சொப்பண சுந்தரி இருக்கா. அவளை நான் அரேஞ் பண்ணுறேன். எல்லா செலவையும் நான் பார்த்துகிறேன். அடுத்த மீட்டிங்குல எவ்வளவு கும்பல் வருதுனு மட்டும் பாருங்க.”

வினோத் "செப்பண சுந்தரி வேண்டா அங்கிள். அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.”

முரளிதரன் “இப்படி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். சரியா தெரியாம பேசாத. இன்னும் சொப்பண சுந்தரி அம்மாவுக்கே கல்யாணம் ஆகலை. நான் சொல்லுறதை கேளுங்க. இந்த ஐடியா தான் சரி”

"என்னவோ பண்ணுங்க. நமக்கு அஸ்ட்ரானமி பாபுலர் ஆனா போதும்.” என்று கூறி அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

 அடுத்த மீட்டிங்கும் வந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த பெரிய அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுபடுத்த பிரபஞ்ச போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அது வரை கூட்டத்திற்கே வராத பல உறுப்பினர்கள் வந்திருந்தனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு சரியாக பதில் சொல்வோருக்கு சொப்பண சுந்தரியுடன் உணவருந்தும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கேள்வி மிகவும் எளிமையானது. ’சொப்பண சுந்தரியை இப்போ யார் வெச்சிட்டு இருக்குறது?’ என்பதே அது.

 கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லவே முரளிதரனும் காவல்துறையுடன் சேர்ந்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். அதற்கு காரணம் அவர் பிடல்கியூஸ் நட்சத்திரத்தில் காவல்துறையில் பணியாற்றியதாக அவரே கூறிக் கொண்டது. அதற்கான ஆதாரமாக வினோத் முரளிதரனிடம் ஐ.டி கார்டை கேட்ட போது ஏதேதோ சொல்லி அங்கிருந்து நகர்ந்தாலும்  அந்த கூட்டம் முடியும் வரை அனைவரித்திலும் தன்னையும் ஒரு போலீஸ்காரர் என்றே அறிமுகம் செய்து கொண்டு மகளிர் வரிசையி ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார்.



Tuesday, June 12, 2012

எப்படி? ஏன்? எதற்கு?



ஐயப்பன், வேலூர்.
குவாண்டம் தியரி என்ன ஒரு முரண்பாட்டுத் தத்துவமா?
     முரண்பாடு என்று எதை சொல்லுகிறீர்கள்? நம் தினப்படி வாழ்வில் நமக்கு அது புரியாமல் இருப்பதாலா? ஒருவேளை அது தான் காரணம் என்றால் நீங்கள் சொல்லுவது தவறு. நாம் இன்று பார்க்கும் தொலைக்காட்சியிலிருந்து அனைத்தும் குவாண்டம் தியரியால் தான் வருகிறது. அதைப் போல் ஒரு ஒரு successive தியரி வேறேதும் கிடையாது என்று சொல்லலாம். இது முரண்பாடாகத் தெரியக் காரணம் நாம் தான். அது முரண்பாடு இல்லாமல் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு பை(π) யை எடுத்துக் கொள்வோம். π யின் மதிப்பு 3.14......... இத்யாதி இத்யாதி என போய்க் கொண்டேயிருக்கும் முடிவேயில்லாமல். இது நாள் வரையில் அதற்கு ஒரு முடிவை நாம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒரு வட்டத்தின் சுற்றளவு πr2 தான். அது முடிவானது. எந்த வகை வட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் சுற்றளவு இது தான். அறுதியிடக்கூடியது. அதாவது π என்பது π ஆகவே இருக்கும் போது பிரச்சனையேயில்லை. ஆனால் πயை நம் அறிவிற்கு புரியும் படி நமக்குத் தெரிந்த எண்களில் மாற்றும் போது தான் பிரச்சனையே. அது 3.14..... என முடியாமல் போய்க் கொண்டு இருக்கிறது. அப்போது தான் முரண்பாடே வருகிறது. நீங்கள் சொல்லும் முரண்பாடும் இப்படித்தான். குவாண்டம் தியரி அதுவாகவே இருக்கும் போது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை நமக்குத் தெரிகிற வகையில் மாற்றும் போது தான் பிரச்சனை. எல்லாம் மன பிராந்தி.    

ராம்குமார், பாபனாசம்.
2012 டிசம்பரில் உலகம் அழியமா?
     2013 ஜனவரியில் சொல்கிறேன்..........

காயத்ரி, மதுரை.
மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தேர் ஓட்டினார் சரி. ராமாயணத்தில் ராமனுக்குத் தேர் ஓட்டியது யார்?
      ராமாயணத்தில் ராமனுக்குத் தேர் ஓட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் ராமனே வனவாசத்தில் தானே இருந்தார்.........

விஷ்வா, புரசைவாக்கம்
நியூரான் நியூட்ரான் என்ன வித்தியாசம்?
     மனித மூளை நியூரான்களால் ஆனது.
நியூட்ரான் என்பது அணுவின் கருவில் இருக்கும் ஒரு வகையானத் துகள். அதற்கு மின்னூட்டம் கிடையாது. நட்சத்திரத்தின் ஒரு வகைக்கும் நியூட்ரான் என்று பெயர்..  நியூரான் என்பது மூளை சமாச்சாரம். நியூட்ரான் மூளையால் யோசித்துக் கிடைத்த சமாச்சாரம். அது சரி நியூட்டன் என்றால் என்ன தெரியுமோ? அது ஒரு அலகு. விஞ்ஞானி நியூட்டன் பெயரால் அழைக்கப்படுகிறது.

அபிநயா, சேலம்
ஆங்கிலத்தில் beleif மற்றும் trust –க்கு தமிழில் ஒரே பொருளா? அல்லது வேறுவேறா?
     பலர் அதற்கு ஒரே பொருள் என்று சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அவை இரண்டிற்கும் வேறு பொருள்கள் என்றே நினைக்கின்றேன். beleif.என்பது அறிவியல் சார்ந்த விஷயங்களுக்குப் பொருந்தும். அதாவது Newton beleived that law of gravity is correct. நியூட்டன் தனது ஈர்ப்புக் கொள்கை சரியானது என்று நம்பினார். இந்த நம்பிக்கை அறிவியல்  சார்ந்தது. I think there are lots of mouintains available in another side of the moon. இவையெல்லாம் அறிவியல் பின்னணி சார்ந்தது. இதனை சரி என்றோ அல்லது தவறு என்றோ நிரூபிக்க முடியும். ஆனால் trust என்பது வேறு கதை. அதற்கு அறிவியல் பின்புலம் தேவையில்லை. அது நம்பிக்கை சார்ந்தது. I am trusting god என்பது இவ்வகை சார்ந்தது. இவை நம்பிக்கை மூலம் வருவது. இதனை அறிவியல் மூலம் விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் beleif மற்றும் trust –டினை தமிழ் படுத்தும் போது நாம் நம்பிக்கை என்ற ஒரே பொருளில் தருவதால் வரும் குழப்பம். ஒருவேளை தமிழில் அக்காலத்தில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகளுக்கும், அதனை சாராத நம்பிக்கைளுக்கும் நாம் வித்தியாசப்படுத்தாமல் விட்டதனால் அதற்கென தனித்தனி வார்த்தைகள் பயன்படுத்தாமல் விட்டிருப்போம்.

பதில் சொல்ல முடியாத சில கேள்விகள்

பாவனா, திருப்பூர்
உங்க வயசு என்ன சார்?

மினுஜா, சென்னை
என்னை ஏன் யாரும் காதலிக்க மாட்டிங்குறாங்க?

ராமானுஜம், மயிலாப்பூர்
உங்க வீட்டு விலாசம்? 


வினோத் குமார்

Friday, May 11, 2012

வானியலின் வரலாறு – 2



        இரண்டு கிரேக்கர்கள் தனித்தனியாக ஒரே மாதிரியாக யோசித்து உண்மையைக் கண்டறிந்தார்கள் என்று முன்னரே கூறினேன். அவர்கள் மூன்று காரணங்களை வைத்து பூமி தட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது சிலிண்டராகவோ இருக்காது என்று கூறினர்.

  முதல் காரணம்: சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் நிழல் பூமியுடையதோ என்று அவர்கள் சந்தேகப்பட்டனர். அப்படி அது பூமியின் நிழலாக இருக்கும்பட்சத்தில் அது ஏன் எப்போதும் வட்டமாகவே விழ வேண்டும்?

       பூமி வட்டமாக இருந்தால், எல்லா நேரங்களிலும் நிழல் வட்டமாக விழாது. சில நேரங்களில் அது நீள்வட்டமாக விழுந்துவிடும். அல்லது பூமி ஒரு சிலிண்டர் வடிவமாக இருந்தாலும் அதன் நிழல் வட்டமாக விழாது. ஆனால் எப்போதுமே பூமியின் நிழல் வட்டமாக விழுவதை அவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள்.

            ஏனெனில் கிரேக்கர்கள் பல வருடங்களாகவே கிரகணத்தை ஆராய்ந்திருந்தனர்.



 இரண்டாவதுக் காரணம்: கடலில் கப்பல் செல்லும் போது, அது தூரமாக சென்ற பின் முதலில் அதன் அடிப்பாகம் மறைந்து, பின்னர் அதன் மேல் பாகம் மறைவது!

   ஒருவேளை, பூமி தட்டையாக இருந்தால் அடிப்பாகமோ மேல்பாகமோ, 
எல்லாமே ஒரேடியாக மறையவோ அல்லது முழுவதும் மறையாமல் தெரியவோ வேண்டும். ஆனால் அப்படியில்லாமல், முதலில் அடிபாகமும் பின்னர் மேல் பாகமும் மறைய காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தனர்.

   மூன்றாவதுக் காரணம்: கிரேக்கர்கள் அப்போதே துருவ நட்சத்திரத்தை பற்றி அறிந்திருந்தனர். பூமத்திய ரேகை பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல துருவ நட்சத்திரம் வானில் கீழே இறங்கிவிடுவதையும், துருவப் பகுதி (வட துருவம்) நோக்கிச் செல்லச் செல்ல துருவ நட்சத்திரம் அவர்கள் தலைக்கு மேல் செல்வதையும் அவர்கள் கவனித்தார்கள்.

   பூமி தட்டையாக இருப்பின் இது சாத்தியமே இல்லை! பூமி தட்டையாக இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும்.



    மேற்சொன்ன மூன்று காரணங்களும், பூமி உருண்டையாக இருந்தால் தான் சாத்தியம். அது தட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது சிலிண்டராகவோ இருந்தால் சாத்தியமேயில்லை.

      எனவே இந்த மூன்றுக் காரணங்களை வைத்து அவர்கள் இந்த பூமி உருண்டை வடிவத்தில் தான் உள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.

   அது சரி, யார் அந்த இரண்டு கிரேக்கர்கள்? என்று தானே கேட்குறீர்கள். ஃபைலோலாஸ் மற்றும் அரிஸ்டாட்டில் என்பவர்களே அவர்கள்.

ஃபைலோலாஸ்

      முன்னவர் கி.மு 450 மற்றும் பின்னவர் கி.மு. 380 ஆண்டுளைச் சார்ந்தவர்கள். இருவரும் தனித்தனியே இதுப் பற்றி கண்டறிந்தனரோ அல்லது ஃபைலோலாஸ் முன்மொழிந்து அதை அரிஸ்டாட்டில் வழிமொழிந்தாரோ.

ஆக மொத்தம் பூமி ஒரு கோளம் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

        அரிஸ்டாட்டிலே சொன்னதற்குப் பிறகு பூமியின் வடிவம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் அதன் பின் ஏற்படவேயில்லை. ஏனெனில் அரிஸ்டாட்டிலுக்கு அந்த காலத்தில் அவ்வளவு மவுசு!

அரிஸ்டாட்டில்

   ஆனால் இன்றும் கூட சில நாடுகளில் பூமி தட்டையானது என்று கூறி சில கிளப்புகள் உள்ளன. அதில் பலர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

   என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும், நாம் பூமியை செயற்கைக் கோள் வழியாகப் படம் பிடித்துக் காட்டினாலும் அவர்கள் நம்புவதாக
இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் காணும் நிலப்பகுதி
தட்டையாக இருப்பதால் பூமி முழுவதுப் தட்டையாகவே இருக்கும் எனும்
அனுமானத்திற்கு அவர்கள் வந்து விட்டனர்.

    எது எப்படியோ, நமது முன்னோர்கள் பூமி உருண்டை என்று கண்டுப்பிடித்து விட்டார்களே அதுவேப் போதும்.

     பை த வே, பூமி உருண்டை என்பது இருக்கட்டும். அது எவ்வளவு வளைந்திருக்கிறது என்றுத் தெரியுமா?

      பூமியில் 8000 மீட்டர்கள் பயணம் செய்தால் சரியாக பூமி 5 மீட்டர் கீழிறங்கும். இதனைச் சொன்னவர் கலீலியோ.

பூமிப் பற்றி சரி, வானம் பற்றி கிரேக்கர்கள் என்ன நினைத்தார்கள்?

அடுத்த கட்டுரையில்!

                                         (இனி வானம் பற்றி அறிவோம்)
   
                                               வினோத் குமார்

Saturday, May 5, 2012

வானியலின் வரலாறு - 1


வானியலின் வரலாறு - 1
          உங்களின் சொந்த ஊர் எது? சென்னை? மதுரை? தூத்துக்குடி? 
ஆண்டிப்பட்டி? இதில் எதுவும் இல்லாமல் வேறொன்றா? கவலையில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கேள்வி இப்போது அதுவல்ல. உங்கள் ஊரைத் தாண்டி நீங்கள் சென்றால் என்ன இருக்கும்? இதென்ன இப்படி ஒரு கேள்வி! என்றா கேட்கிறீர்கள். இருக்கட்டும் சொல்லுங்கள். உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்? ஆண்டிப்பட்டியைத் தாண்டிச் சென்றால் ஒருவேளை பெரிய ஆலமரமும், ஐயனார் கோவிலும் இருக்கலாம். சென்னையின் ஒருப்பக்கம் கடல். சரி, கடலைத் தாண்டிப் போனால்!

        நீங்கள் எங்கு, எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் ஊரைத் தாண்டிச் 
சென்றால் இன்னொரு ஊர் இருக்கும் அல்லவா! பொறுமை. பொறுமை. என்னை அடிக்க வராதீர்கள். இதெல்லம் ஒரு கேள்வியா? என்று தானே கேட்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அர்த்தம் உண்டு. நான் கேட்ட கேள்வி உங்களுக்கு கேள்வியாகவேத் தோன்றாமல், உங்களை கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், நான் கேட்ட கேள்வியை நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பதில், அவர்கள் ஊரைத்தாண்டி எதுவும் இல்லை! என்பது தான். உங்கள் ஊர். அதன் பிறகு பெரியப் பள்ளம். இவ்வாறு தான் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். ஒருவேளை உங்கள் ஊர், அதன் பின் அடுத்த ஊர். அவ்வளவு தான். அதன் பிறகு எதுவுமில்லை. பெரியப் பள்ளம் தான். இவ்வாறு தான் கூறியிருப்பார்கள்.

   ஆனால் இந்த பதில் கிடைக்க நீங்கள் இப்போது பிறந்திருக்கக் கூடாது. 
நீங்கள் மனித சரித்திரத்தின் ஆரம்ப நாட்களில் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படிப் நீங்கள் பிறந்து இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயம் நான் கூறிய பதில் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.  உண்மையிலேயே சரித்திர காலத்தின் ஆரம்ப நாட்களில் பண்டைய மக்கள், அவர்கள் ஊரையும், அதற்கு பக்கத்து ஊரையும் தவிர எதுவுமில்லை என்றே நினைத்தனர். யாரவது அதையும் தாண்டி செல்வார்களானால் “தொபகடீர்” என்று விழுந்து விடுவார்கள் என்று கூறினர். பூமி என்பதே அவர்கள் ஊரும், பக்கத்து ஊரும் தான்! மேலும் இந்த பிரபஞ்சம் என்பதே இந்த பூமி மட்டும் தான். இதுதான் அவர்களின் கணிப்பு. அது சரி, பூமி என்பதே இந்த இரண்டு ஊர்கள் தான் என்றால் பூமியின் வடிவம்? தட்டைத் தான். வேறென்ன! இரண்டு  ஊர் மட்டுமே இருக்கும் பூமி வேறு எப்படி இருக்கும். ஆனால் மனிதன் அதோடு நிற்கவில்லை. காலம் தன் கையில் எல்லவற்றிற்கும் பதிலை வைத்திருந்தது.   

           மனித சரித்திரத்தில் நாகரீகம் பிறக்க ஆரம்பித்தது. மனிதன் 
கண்டுப்பிடித்த கண்டுப்பிடிப்பிலேயே சிறந்த ”சக்கரம்” கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. ஒருவேளை அவன் ஊருக்குப் பிறகு வேறு ஊர், அதன் பிறகு வேறு ஊர் என ஒரு நாலைந்து ஊர்கள் இருக்கும் என்று எண்ணனார்கள். ஆனால், பூமி அவ்வளவு தான். அது தட்டையானது. சில ஊருக்குப் பிறகு பெரியப் பள்ளம், இக்கருத்தில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஆனால் பண்டைய மனித சரித்திரத்தில் உயரிய நாகரீகத்தைக் கொண்ட கிரேக்கர்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. பெரிய, பெரிய தத்துவஞானிகளைக் கொண்ட நாடு அது. அவர்களின் வித்தியாசச் சிந்தனையும், ஜியோமெட்ரி மீதான அவர்களின் ஆவலும், மோகமும் “தட்டை உலக” சித்தாந்தத்தை தவறு என உணர்த்தியது.


  கி.மு. 500-ல் வாழ்ந்த ”ஹெக்காடியஸ்” என்ற கிரேக்க அறிஞர் பூமி ஒரு 
மாதிரி “வட்டம்” என்றார். “தட்டை உலகத்திற்கு” ஒப்பிட்டால் “வட்ட உலகம்” எவ்வலவோ பரவாயில்லை தான். ஆனாலும் அது போதாதே. உண்மை இன்னும் தொலைவில் உள்ளதே. அதெல்லாம் சரி. பூமி ”தட்டை” அல்லது “வட்டம்” என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் பூமி எதன் மேல் உள்ளது? என்ற கேள்வியை எழுப்பினால், மிகவும் யோசித்து விட்டு “நாலு கம்பத்தின் மேல் பூமி நிற்கிறது” என்றனர். அந்த நாலு கம்பங்கள் எதன் மேல் நிற்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தனர். ஒருசிலர் நமது பூமி ஒரு பெரிய ஆமை மீது உள்ளது என்றனர். சிலர் ஆமை மீது நான்கு யானையும் அந்த யானைகள் மீது நமது தட்டை பூமியும் உள்ளது என்றனர்.

அனாக்ஸ்மாண்டர்

     ஆனால் அதோடு அவர்கள் நிற்கவில்லை. காலம் அதன் ரகசியங்களை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உண்மை பிடிப்பட்டது.    கி.மு. 550-ல் வந்த “அனாக்ஸ்மாண்டர்” என்ற அறிஞர், “இல்லை, இல்லை, பூமி ஒரு மாதிரி சிலிண்டர்” என்றார். ஆனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. காலம் கடைசியில் கனிந்தது. உண்மையை அதன் பிறகு இரண்டு கிரேக்கர்கள் தனித்தியாக கண்டறிந்தனர்.
                                            (இன்னும் கண்டுப்பிடிப்போம்) 

                                                 வினோத் குமார்