தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Tuesday, February 7, 2012

சர்வதேச தமிழ் கவிதை போட்டியில் மூன்றாம் பரிசுப் பெற்ற எனது கவிதை

            எனக்கு கவிதை படித்தோ அல்லது எழுதியோ பழக்கமில்லை. (ஹைக்கூவைத் தவிர). இருந்தாலும் இணையதளத்தில் சர்வதேச தமிழ் கவிதை போட்டிக்கான அறிவிப்பைக் கண்டதும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு பரிசு கிடைக்கும் என்று நிச்சயமாக எதிபார்க்கவில்லை. உண்மையில் பரிசு கிடைத்தது என்று அறிந்தவுடன் என் வீட்டில் சொல்லும் போது அவர் அனைவரும் சிரித்தனர். என்னை நம்மவில்லை. அது ஒரு புறம் இறுக்கட்டும்.

            இந்தப் போட்டியை அமெரிக்காவிலிருந்து நடத்திய சரவணன் மற்றும் அருண்மணி அவர்களுக்கும் மேலும் எனது கவிதையை மூன்றாவது கவிதையாக தேர்வுசெய்த நடுவகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

           என் அம்மா அடிக்கடி இணையதளத்திற்கு மாதாமாதம் பணம் வீணாவதாக நினைத்து கவலைப்பட்ட நேரத்தில் இப்பரிசு அவர்களை கொஞ்ச நாட்கள் அமைதி காக்க வைக்கும். ஏனெனில் பரிசாகக் கிடைத்து "Apple Ipod 8gb touch". 

           எனது வாழ்வின் முதல் இரு கவிதைகளையும் இத்துடன் இணைக்கிறேன். வெறும் பதினைந்து நிமிடத்தில் எழுதி, தமிழில் டைப் செய்து அனுப்பி பரிசு பெற்றது இக்கவிதைகள்.

          நான் எழுதி அனுப்பிய இரு கவிதைகளில் ”வானவில்” எனும் தலைப்புக் கவிதை மூன்றாம் பரிசுப் பெற்றது. முதல் பரிசு இலங்கையில் உள்ளவருக்கும், இரண்டாம் பரிசு துபாயில்  உள்ளவருக்கும் சென்றது.


வானவில்

நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு.
உன் பல வித வண்ணங்களை
பார்க்க முடிந்ததால்.

நான் நன்றி சொல்வேன்
ஐசக் நியூட்டனுக்கு.
உன்னை முதல்முறை பகுத்தறிந்து
உண்மையை உலகிற்கு சொன்னதால்.

நான் நன்றி சொல்வேன்
அந்த மாலை வேளைக்கு.
ஏனெனில் அப்போது தான் நீ
வானில் எழுகிறாய்.

நான் நன்றி சொல்வேன்
அந்த மழைக்கு.
ஏனெனில், அது நின்ற பின்பு தான்
உன்னை வெளிவர அனுமதிக்கிறது.

நான் நன்றி சொல்வேன்
அந்த கதிரவனுக்கு.
ஏனெனில், அதன் ஒளியைத் தான்
நீ பிரதிபலிக்கிறாய்.

நான் நன்றி சொல்வேன்
என் கணக்கு ஆசிரியருக்கு.
”அரைவட்டம் என்றால் என்ன?” என்றபோது
உன்னைக் காட்டியதற்கு.

நான் நன்றி சொல்வேன்
அந்த கிழக்கு திசைக்கு.
எனெனில் உன்னை எப்போதும்
அந்த் திசையிலேயே காட்டியதற்கு.

நான் நன்றி சொல்வேன்
இறைவனுக்கு.
என்னை படைத்ததால் தான்
உன்னை பார்க்க முடிந்ததற்கு.

நான் நன்றி சொல்வேன்
இந்த கவிதைக்கு.
உன்னை வாழ்த்தி என்னால்
ஒரு கவிதை எழுத முடிந்ததற்கு.


சமாதானம்

யாருக்கும் யாருக்கும் சமாதானம்?
மனிதனுக்கும், மனிதனுக்குமா?
மனிதனாக இருந்தால் ஏன் சமாதானம்?
நாம் இன்னும் ஆகவில்லையே மனிதனாக,
அதனால் தான் சமாதானம்.

அன்பு வழியும், அறநெறியும்
இருந்தால், எதற்கு சமாதானம்
பற்றிய பேச்சுக்களும், கவிதைகளும்.

ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் தெரிகிறது
அன்பு வழியும், அறநெறியும்
அதனால் தான் சமாதானம்
பற்றிய பேச்சுக்களும் கவிதைகளுமோ!

சமாதானம் என்பது கோழையின் அடையாளமா?
நிச்சயம் இல்லை. ஏனெனில்,
இயேசுவோ, புத்தரோ, காந்தியோ
கண்டிப்பாக கோழைகளில்லை.

வெள்ளைக் கொடியும், வெண் புறாவும்
சமாதான சின்னங்களாம்!
நம் மனதில் இருக்கவேண்டியது இல்லாததால்
தான் அது துணியிலும், பறவையிலும்
தோன்றியது.

யாருக்குத் தெரியும்! மனிதன்
சமாதானத்தை புறாவிற்கு என்று
எடுத்துக் கொண்டானோ என்னவோ.

உலக சமாதானம், தமிழர் பிரச்சனை சமாதானம்
பாகிஸ்தானுடன் சமாதானம் என்று
பேசிக் கொண்டே நாம்
பக்கத்து வீட்டில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதலில் நம்மைச் சுற்றிய
சமாதானம் முக்கியம்.
தனிமனித ஒழுக்கமும், சமாதானமுமே
நாட்டைக் காப்பாற்றும்

ஒன்று நிச்சயம்
வெறும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு
யாராலும் சமாதானத்தை ஏற்ப்படுத்த முடியாது.
அது ஓநாய், ஆட்டிற்கு காவல்
இருப்பது போல் ஆகிவிடும்.




Monday, February 6, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


சுஜாதாவின் அத்தனை கட்டுரைகளும் எனக்குப் பிடிக்கும் என்றப் போதிலும் இந்தப் பத்துக் கட்டளைகளைப் பற்றி நான் இப்போது தான் அறிந்தேன். எனவே அதனை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்......

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2.
அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் () ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3.
மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4.
நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம்யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5.
ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6.
இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.
எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9.
ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10.
படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.